Tuesday, September 9, 2008

ஒரு வயலின் ஊமையானது.......!


வயலின் தூரிகை
தீட்டிய ஓவியம்
குன்னக்குடி.....


காதுகளை
கௌரவப்படுத்தியது
உன் இசை!

பேசிப்போனதில்
சிதறும் வார்த்தைகளாய்
உன் புன்னகை!


இசையால்
ஆடைக்கட்டுவார்கள்
நீ மட்டும்தான்
ஆடை நெய்தாய்!


உன் கச்சேரிகளில்
உதடுகளை பொருத்தியிருப்பாய்
உன் வயலினுக்கு....

ராகங்களை மொண்டு
டம்ப்ளர்களில்
விநியோகிப்பாய்....


"எந்தரோ மகானுபாவலு"வும்
வாசித்தது உன் வயலின்....
"லாலாக்கு டோல்டப்பிமா"வுக்கும்
வளைந்துகொடுத்தது உன் வயலின்!


பதினோராவது
விரலாகிப்போனது
வயலின்!
எட்டாவது
சுரமாகிப்போனது
உன் பெயர்!
ஒன்பதாவது
திசையாகிப்போனது
உன் ஊர்!


களத்துமேட்டின்
கனத்த
நெருஞ்சிபூக்களுக்கு
மத்தியில் இருந்து
எழுதுகிறேன்.....

எழுந்துவா
அனாதையாய்
அழுதுக்கொண்டிருக்கிறது
உன் வயலின்
கண்ணீர்த்துடைக்க
விரல்கள் இல்லாமல்!!

neelam enbathu song