Wednesday, October 29, 2008

அதுவரை இல்லாத கரிசனம்....!


எந்த ஒரு இரைச்சலின்
வெளிப்பாடாய் தென்பட்டிருக்கும்
இந்த அமானுஷ்யம்!

மௌனிக்கிற
வார்த்தைகளின் பிணம்
இரைச்சல் ஈக்களால்
மொய்க்கப்பட்டிருக்கும் தருணம்
அந்த உதடு உதிர்த்த அமைதியில்
வந்திருந்தது அது.......

எல்லாம் தெளிவாக
காதுகளை தொடும் சத்தங்களில்
கேட்காமல் விடப்படும்
சத்தங்களின் தூரிகை
தீட்டிக்கொண்டிருந்தது!

சந்தர்பங்களை மறுதலிக்கும்
சலன ஓவியம்
மௌன வண்ணங்களால்
அதன் புன்னகை
அழகுப் படுத்தபட்டிருந்ததை மறுப்பதற்கில்லை!

குழந்தைகளின்
விளையாட்டைப்போல் இனிமையானது
அழுகை மறந்து மீண்டும்
மணல் வீடு கட்டுவது!

இருந்தும்
அதுவரை இல்லாத கரிசனத்துடன்
கேட்க வேண்டியுள்ளது
"என்ன ரொம்ப மௌனமாய்
இருக்கீங்க போல கோபமா"

0 comments: