Tuesday, September 4, 2018

07 -06-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 76 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
07 -05-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 76
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அப்போதெல்லாம் வாசல் காட்டி விடும்
வீட்டிற்குள் யார் இருக்கிறார்கள் என்று ....
அப்பத்தாவின் முனை தேய்ந்த செருப்பு
செட்டியார் கடையில் வாங்கிய பக்கோடா
உள்நுழைகையில் வெற்றிலை சாறுடன்
உதட்டில் பதியும் ஈர முத்தம் ...
புத்தக பையுடன் புயலாய் நுழைவேன் கூடம் நோக்கி..
ராவுத்தர் பாய் வந்திருக்க வேண்டும்
அப்பாவுடன் ஏதோ கொடுக்கல் வாங்கல் போல
மரிக்கொழுந்து வாசம் கருப்பு வார் வைத்த செருப்பு
காட்டி கொடுத்து விடும் எனக்கு
பின் வாசல் வழியாக உள் நுழைவேன் ...
சுப்பிரமணி மாமா வரக்கூடாது
கணக்கு வாய்ப்பாடும் மனப்பாட செய்யுளும்
சொல்ல சொல்லி கடுப்பேத்தும்..
ஊரில் முதலில் ஷூ போட்ட ஆசாமி
பக்கத்து வீட்டு பரிமளா மாமி வீட்டில்
கிளம்பும் வரை அகதியாவேன் .. ...
செருப்புகள் நிறத்தில் அளவுகளில்
தெரிவித்துவிடும் உள்ளிருப்பவர் யார் என்று ...
சொக்கலிங்க தாத்தா செருப்பே போட மாட்டார்
ஒற்றைகாரணத்துடன் விளக்கமும் சொல்வார்..
ஒரு பிற்பகலில் செருப்புகளால்
நிரம்பி வழிந்தது எங்கள் வீடு ...
கண்ணீரையும் விம்மலையும்
நிரப்பி ததும்பிய கூடம் பிற்பாடு தீவாகிப்போனது ...
இப்போதெல்லாம் வாசல்களில்
செருப்புகளை பார்க்க முடிவதில்லை ....
சமையலறை வரை செருப்புகளுடன் தான்
நடமாடுகிறேன் நான் ...
காலிங் பெல் ஓசையில் கதவுக்கு வெளியே
அமைதியாய் கிடக்கிறது
அடுக்கி வைத்திருக்கும் செருப்புகளின் அலமாரி...
- நாகா

No comments:

neelam enbathu song