Tuesday, September 4, 2018

13-03-2017 திங்கள் ஒற்றையடி பாதை: 11 தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் இன்று வலம் வந்த கவிதை ...



RJ Naga
13-03-2017
திங்கள்
ஒற்றையடி பாதை: 11
தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் இன்று வலம் வந்த கவிதை ...
ஆறு பூரா தண்ணியோட
ஆகாச தாமர மெதந்து ஓட
தண்ணிபாம்பாட்டம்
நீந்தி கடப்போம் அப்பாவும் நானும் ...
குளிக்க தொவைக்க
எல்லாத்துக்கும் ஆறுதான்
மழை வந்தா போதும்
ரொம்பி வழியும் எங்க ஊரு வெள்ளாமை ...
ஊடுபயிராட்டம்
மொச்சக்கொட்டை வெதைச்சு
கால்காணி புஞ்சை வாங்கமுடிஞ்சது
எல்லாம் இந்த ஆத்தாலதான் ...
ஆத்த கடந்து போனதல்லாம்
ஒரு காலம்
பரிசல்ல போனாலே
அம்புட்டு நேரமாகும் ...
நெல்லிக்கா திங்காமலே
தித்திக்கும் எங்கூரு தண்ணி..
கெண்டை மீனை கொழம்பு வெச்சா
ஊரெல்லாம் வாசம் வரும் ...
பொண்டுபுள்ளைங்க
குளிச்சு வளர்ந்த இடம் ....
செத்த மீனாட்டம்
கத்திரி வெயிலில் நெளியுது ...
ஆத்து மணல் எல்லாம்
எங்க ஆயி அப்பன் கால்சுவடு
கரையோரம் ஒதுங்குது
நுரைநுரையா கண்ணீரு..
கொஞ்சமா ஆறு இப்பவும் ஓடுது
ஏதோ ஒரு கலர்ல சோகையா
கண்ணாமூச்சி ஆடுது ..
இப்போ ஊர்ல எல்லோரும்
வேலைக்கு போறாங்க
சாய கம்பனியில
கை நெறைய சம்பளமும் வாங்கறாங்க...
சாயம் போயிட்டு இருக்கற
வாழ்க்கையைப்பத்தி
யாருக்கும் கவலையில்லை ...
காணியெல்லாம் காஞ்சி போச்சு
விவசாயம் செத்துப்போச்சு
ஆத்துல மூழ்குன ஊரு
ஊருக்குள்ள இப்போ மூழ்குது ஆறு.....
- நாகா

No comments:

neelam enbathu song