Tuesday, September 4, 2018

neelam enbathu song


01-03-2017 புதன் ஒற்றையடி பாதை : 1 தமிழ் 89.4 பண்பலையில் " வானவில் " இன்றைய கவிதை ...

Raman Nagappan shared a photo.
RJ Naga
01-03-2017
புதன்
ஒற்றையடி பாதை : 1
இனி ஒவ்வொரு நாளும் பிரிவும் பிரிவு நிமித்தமுமான கவிதைகளி இந்த பகுதியில் உங்களுக்காக பாதிவேற்ற போகிறேன் ..
தமிழ் 89.4 பண்பலையில் " வானவில் " ஒற்றையடி பாதைக்காக ....
இன்றைய கவிதை ...
கின்னார சத்தத்தில
கெடையெல்லாம் முழிச்சிருக்கு ....
தழை பறிச்ச தொரட்டியெல்லாம்
தொழுவத்தில் படுத்திருக்கு ...
ஒத்தமாட்டு வண்டியிலே ஒய்யாரமா போறவக
லாந்தர் விளக்கொளியில் வக்கணையா வாரவக
ஒத்த கொடம் தண்ணிஊத்தி
நந்தவனம் பூத்திருக்கும்
கொசுவத்தில் தலை சாய்ச்சு
குண்டுமல்லி வேர்த்திருக்கும் ...
அய்யனாரு வாரதுபோல் என்ன ஒரு கம்பீரம்
சீரகசம்பாவ சமைச்சதுபோல் சாரீரம் ..
குத்துக்காலிட்டு நான் திண்ணையில காத்திருந்தா
வீதியில உன் நெனப்பு நெழல்போல குடைபுடிக்கும்...
ஆலமர விழுதுக்கு ஜடை பின்னி பார்த்தவத்தான்
ஒத்தப்பனை மரமாட்டம் தவிக்கறேனே இப்போது...
ஆத்தாடி அடிமனசை வேரோடு பறிச்சுப்புட்டான்
ரங்க ராட்டினமா என் மனச சுத்த உட்டான் ....
காதுக்குள்ள திருகாணியா காதலை நான் பூட்டிக்கிட்டேன்
சிறுக்கி மக உசுருக்குள்ள காதல் கதை எழுதிகிட்டேன் ...
- நாகா

02-03-2017 வியாழன் ஒற்றையயடி பாதை : 2 இன்றைய வானவில் இந்த கவிதையுடன் தன் வண்ணத்தை நம் நினைவு வீதியில் பூசி சென்றது ..


RJ Naga
02-03-2017
வியாழன்
ஒற்றையயடி பாதை : 2
இன்றைய வானவில் இந்த கவிதையுடன் தன் வண்ணத்தை நம் நினைவு வீதியில் பூசி சென்றது ..
குறும்பாட்டு கறிசமைச்சு
குத்தவச்சு காத்திருக்க
மத்தியான டவுன் பஸ்ஸும்
உன் வரவை பார்த்திருக்க
ஓடையில நாரையெல்லாம்
உம்பேரை சொல்லும்போது
கண்ணுபட கூடாதுன்னு
கன்னத்துல போட்டுக்கிறேன் ...
மச்சான் நீ போன இடம் மரிக்கொழுந்துக்கு தெரியல்ல
மருதாணி ஏன் செவக்கலைனு சத்தியமா புரியல...
பொள்ளாச்சி சந்தையிலே
பொழுதெல்லாம் உன்கூடதான்
கண்டாங்கி சீலைக்கும்
கனவெல்லாம் உன் மேலத்தான் ...
கைபுடிச்சு நடக்கையிலே
கைரேகை மாறிப்போச்சு
உன் தடம் பார்த்து கூடவந்து
வந்த வழி மறந்து போச்சு ....
உச்சியிலே வச்ச பூவு வாசம் விட்டு போகுதையா
நெத்தியில் உன் நெனப்பு விண்ணுவின்னு தைக்குதய்யா...
பாதகத்தி செஞ்சதென்ன
சொல்லி நீயும் போயிருந்தா
மிச்சம்மீதி உசுருக்கும்
பங்கம் வந்து சேராது ..
உனக்காக சுவாசிச்சேன்
அது உனக்கு தெரியல
நமக்காக யோசிச்சேன்
நெலமை இப்போ சரியில்ல ...
ஒத்தமாட்டு வண்டியாட்டம் தடுமாற விட்டுபுட்ட
செக்கு மாட்டு வாழ்க்கையைத்தான் தடம் மாற்றி காட்டிப்புட்ட.....
-நாகா

04-03-2017 சனிக்கிழமை ஒற்றையடி பாதை : 3 இன்றைய தமிழ் 89.4 பண்பலையில் நிகழ்ச்சியின் நிறைவில் இடம் பெற்ற கவிதை ...


RJ Naga
04-03-2017
சனிக்கிழமை
ஒற்றையடி பாதை : 3
இன்றைய தமிழ் 89.4 பண்பலையில் நிகழ்ச்சியின் நிறைவில் இடம் பெற்ற கவிதை ...
மஞ்சக்கனகாம்பரம்
கொள்ளையில பூத்திருக்கு
துலுக்க சாமந்தி
வாசத்தில வீடிருக்கு...
கூரையில அவரக்கொடி
ஆகாசம் பார்த்திருக்கு ....
கோபுரத்து நிழலாட்டம்
நெனப்புன்ன சுமந்திருக்கு ...
செறுவாட்டு துட்டுக்கு
காணிவாங்க முடியாது ..
அருகம்புல் திங்காட்டி
ஆட்டுபசி அடங்காது ..
மந்தையில் நின்னாலும்
தறிகெட்டு திரியாது ...
பருத்தி காட்டுக்குள்
வெடிச்சத்தம் குறையாது ...
கட்டைவண்டி போன தடம்
காஞ்ச ஆறு காட்டிப்புடும் ..
உள்ளுக்குள்ள கல்லெறிஞ்சா
பார்வையில் சாரல்வரும் ....
குறைகுடமா தளும்பறது
கைவளைகள் சொல்லிப்புடும் ..
குத்தவச்ச திண்ணையிலே
உன் நெனப்பு கோலமிடும் ..
மழை ஓய்ந்த நேரத்துல
கிளைகளிலே தூறல் வரும் ..
காகித கப்பலுக்கும்
கடல் மேல காதல்வரும் ..
பூனைக்குட்டி போலத்தானே
உன் காலசுத்தி கெடக்குறேன் ..
பொசுக்குன்னு பூத்ததால
காதலை பொத்திவச்சு தவிக்கிறேன் ...
- நாகா

05-03-2017 ஞாயிறு ஒற்றையடி பாதை : 4 தமிழ் 89.4 பண்பலையில் இன்று சுழன்ற இன்றைய வானவில் கவிதை ....


RJ Naga
05-03-2017
ஞாயிறு
ஒற்றையடி பாதை : 4
தமிழ் 89.4 பண்பலையில் இன்று சுழன்ற இன்றைய வானவில் கவிதை ....
ஊதாக்கலர் ரிப்பனுக்கு
பூப்போட்ட அரக்கு கலர் பாவாடை ..
ரெட்டைஜடை பின்னலுக்கு
ஒய்யாரமா மஞ்சக்கலர் தாவணி...
கடைசி பெஞ்சுல
செவனோ கிளாக் பிளேடால
கீரிவச்ச எம் பேரு ......
தட்டாமாலை சுத்தமா
அவ நெனப்பு தூங்காது ...
கொசுறு ஒண்ணு வாங்காம
சிறுக்கி கண்ணு மூடாது...
ஜாமென்ட்ரி பாக்ஸுக்குள்ள
வெச்சிருப்பா அர நெல்லிக்கா ..
பாதி கடிச்சு தண்ணி குடிக்க
தித்திக்கும் அவ நெனப்பு ..
கொடுக்கப்புளி சிநேகத்தில
எச்சில் பட்டா தப்பு இல்ல...
ஜென்மத்தை டம்பளர்ல
ஊத்தி நானும் குடிக்கப்போறேன் ..
ஆலமர பொந்துக்குள்ள
கிளியாட்டம் தங்கப்போறேன் ...
உள் நீச்சல் அடிக்கையிலே
கைய பிடிச்சுப்பா ..
சைக்கிள் மிதிக்கையிலே
வரப்போரம் பார்த்துப்பா...
ஆம்பளையா பொறந்திருந்தா
கண்ணாலம் கட்டிப்பேனு
கண்ணடிச்சு கைபுடிப்பா ...
இறுமாப்பு இல்லாம
சகஜமா தான் பேசிக்கோவோம் ...
கம்மங்கூழு கருவாட்டுகொழம்பா
பக்குவமா பழகிக்கோவோம் ...
மொட்டைமாடி வத்தலாட்டம்
காயறது என் பொழப்பு
காம்பவுண்டு செடி போல
தலைநீட்டுறது அவ பொழப்பு ...
எங்க போனாளோ இன்னும் தெரியல
பச்சை தாவணியும் இன்னும் சாயம் போகல...
தாகம் ஒண்ணு தொண்டைக்குள்ள
கட்டுப்பட்டு நிக்குது
தாயம் ஒண்ணு விழுந்துபுட்டா
பாம்பு ஒண்ணு கொத்துது ....
- நாகா

06-03-2017 திங்கள் ஒற்றையடி பாதை : 5 தமிழ் 89.4 பண்பலை வானவில்- லில் இன்று ஒலித்த கவிதையின் வரிவடிவம் ...


RJ Naga
06-03-2017
திங்கள்
ஒற்றையடி பாதை : 5
தமிழ் 89.4 பண்பலை வானவில்- லில் இன்று ஒலித்த கவிதையின் வரிவடிவம் ...
ஆத்துல வெள்ளம் வந்தா
அடிமனசு சில்லிடும்
ஆத்தா உன் நெனப்புல தான்
சாமியையே கும்பிடும் ...
நிழலாக நீயிருந்த
ராத்திரியில் தொலைச்சதென்ன
நிலவாக நீயிருந்த
நிழல் விழாம போனதென்ன ...
புளியங்கா புளிக்கறது
அது ஒண்ணும் குத்தம் இல்ல
வேப்பங்கா இனிக்கறத
கேட்க ஒரு நாதியில்ல...
பத்தாயம் நிரம்பாம
பாதகத்தி உன்னைத்தேடும்
பஞ்சார கோழிகூட
பட்டினியா கண்ண மூடும் ...
கட்ட வண்டி கடந்து போன
நதியில் இப்போ தண்ணி இல்ல
அடிமாட்டுக்கு போனதால
மூக்கணாங்கயிருக்கு வேலையில்லை ..
சிறுக்கி மக உன் நெனப்பு
செதறு தேங்கா ஆகிடுச்சு
சூடம் போல காத்துலதான்
கரைஞ்சுதானே போயிடுச்சு ..
நேத்திருந்த மீனெல்லாம்
கருவாடா ஆனதென்ன
காத்திருந்த கொக்கெல்லாம்
ஏமாந்து போனதென்ன ..
ஒரு வாட்டி வந்துவிடு
விட்டதெல்லாம் செஞ்சிடுறேன்
பட்ட கடனுக்கு நான்
என் உசுர தந்திடுறேன் ...
நீ போன பாதையெல்லாம்
நெருஞ்சியா பூத்திருக்கு
தொட்டி செடியெல்லாம்
உன் திசையை பார்த்திருக்கு ...
வாசல் கோலத்துல
புள்ளியாக நீ இருப்ப ...
பூசணி பூவாட்டம்
நாள் கணக்கா நீ சிரிப்ப...
ஆத்தா உன் சீலையை நான்
கொஞ்ச நேரம் போர்த்திக்கறேன்
கருவாகி உனக்குள்ள
கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்….
- நாகா.

07-03-2017 செவ்வாய் ஒற்றையடி பாதை : 6 தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் ஒலித்த நிறைவு கவிதை ...


RJ Naga
07-03-2017
செவ்வாய்
ஒற்றையடி பாதை : 6
தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் ஒலித்த நிறைவு கவிதை ...
ஆலமரத்த சுத்தி
அடிவயத்தை பார்த்ததில்ல...
அரசமர கிளையிலே
தொட்டில் கட்டி அசைத்ததில்ல ...
சோளகதிராட்டம்
தலைசாய்த்து நானிருந்தேன்
சொக்க தங்கத்தின்
வரவுக்கு காத்திருந்தேன் ...
ஆனி பொன்போல
அசைந்து வரும் சித்திரமோ
தெப்பக்குளத்துக்குள்ள
மிதந்துவரும் வெண்ணிலவோ ...
மரப்பாச்சி பொம்மைக்கு
மயிலிறகில் சட்டை தச்சேன்
சடைபின்னி பூ முடிச்சு
கன்னத்துல பொட்டு வெச்சேன் ...
அடிவயத்தை தொட்டுப்பார்த்து
அடிக்கடி நான் சிரிச்சுக்குவேன்..
மாம்பிஞ்சு கால் உதைக்க
பொசுக்குன்னு முழிச்சுக்குவேன் ...
பல்லாங்குழி சோழியாட்டம்
நாள் கணக்க நான் ரசிக்க
கன்னங்குழியோரம்
முத்தக்கப்பல் தான் நனைக்க
கரைதட்டி கிடக்குது
தாய்மர கப்பல் ஒண்ணு ..
கொடைசாய்ஞ்சு கிடக்குது
கோபுர தீபம் ஒண்ணு ...
ரத்தமும் சதையுமா
கைகால் அசைக்கும்னு
காத்திருந்த நேரத்துல
கரைஞ்சு போனதென்ன ...
கொலுசு போட்டுக்கிட்டு
தரையெல்லாம் தாளமிட
நடைவண்டி ஒட்டிக்கிட்டு
கூடமெல்லாம் சுத்திவர
உன் பிஞ்சு விரல்பிடிச்சு
என் சுட்டுவிரல் நான் தொலைக்க
மெல்ல ஒளிஞ்சுக்கிட்டு
என் முந்தாணையை நீ இழுக்க
எல்லாம் கனவாச்சு
உன் வரவு கானல் நீராச்சு
செல்ல விதை உன்ன
கை நழுவ விட்டாச்சு ..
- நாகா

08-03-2017 புதன் ஒற்றையடி பாதை : 7 தமிழ் 89.4 பண்பலை இன்று வானவில் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்ட கவிதை ...


RJ Naga
08-03-2017
புதன்
ஒற்றையடி பாதை : 7
தமிழ் 89.4 பண்பலை கிளாசிக் மேட்டணி மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் இன்று வானவில் ஒற்றையடி பாதையில் பகிர்ந்துகொண்ட கவிதை ...
சுள்ளி பொறுக்கும்
சவுக்கு தோப்புக்குள்ள
அரளி பூக்குதுன்னு
யாருமே சொன்னதில்லை ....
நாத்து நடுறப்ப
வரப்புல வானவில்லை
கண்டெடுத்து வந்ததாக
கதை நானும் கேட்டதில்லை ...
சிட்டு குருவிக்கு
ஆகாசம் சீனி மிட்டாய்
சிறகு விரிக்க தான்
தோதில்ல இப்போது ...
பொட்டப்புள்ளையா
பொறந்துப்புட்டேன் பூமியிலே
பூப்பறிக்க ஆசைப்பட்டு
முள்குத்தி தான் தவிச்சேன் ...
அருகம்புல்லைதான்
வெள்ளாடு மேயவரும்
ஒத்த பனித்துளியை
எம்புட்டு நேரம் தாங்கறது ...
சிரபுஞ்சி கண்ணுக்குள்ள
சகாராவோ நெஞ்சுக்குள்ள
உலைகொதிக்கும் சொல்லுக்குள்ள
உசுரு இப்போ விட்டத்தில...
பானையை உருட்டறது
அடுப்போட வேலையாச்சு
பூனையை மிரட்டுறது
எலிகளோட வழக்கமாச்சு ...
முந்தாணை ஓரத்துல
முடிஞ்சு வெச்ச ஆச நூறு
கொசுவத்தை கண்ணீரில்
நீந்தவிட்டு போனதாரு...
எட்டு திசைக்குள்ள
என்ன தேடுறேன்
சுட்டும் விழியால்
பாதை போடுறேன் ...
- நாகா

09-03-2017 வியாழன் ஒற்றையடி பாதை : 8 தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியின் நிறைவில் கொடுத்த கவிதை ..........



RJ Naga
09-03-2017
வியாழன்
ஒற்றையடி பாதை : 8
தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியின் நிறைவில் கொடுத்த கவிதை ..........
கொல்லப்புரத்துல
என்ன போல நெடுநெடுனு
வளர்ந்திருந்தது முருங்கை மரம் .. ..
சட சடையா காய்க்கும் காயும்
கொத்து கொத்தா பூத்த முருங்கைப்பூவும்
இன்னும் நிழலா செதறிகெடக்கு
பாழாப்போன மனசுக்குள்ள...
ஜன்னலுக்கு வெளிய
பாக்கறப்பல்லாம் குதித்து ஓடும் ஒரு அணில்
முருங்க பிசினில உட்கார்ந்து போற
ஒரு பட்டாம்பூச்சி
நாலஞ்சு கம்பளிப்பூச்சிகளோட
மடிச்சு வெச்ச நாற்பத்தெட்டாம் பக்க
ஜெயகாந்தன் நாவலாட்டம்
மந்தகாசமா சிரிக்கும் ..
ஊருல இருக்கும் சித்தப்பா
அப்பத்தா வீட்டுக்கு எதிரில் இருக்கும்
தொரைக்கண்ணு மாமா
எங்க வீட்டு முருங்கைக்காய்-ன்னா
அவ்வளவு பிரியம் ...
நாலு இணுக்கு கீரை
கொஞ்சம் பருப்பு போட்டு கடைஞ்சா
ரெண்டு கவளம் தூக்கலா சாப்பிடலாம் ...
மாமரத்துல ஊஞ்சல் கட்டி ஆடினாலும்
அதென்னவோ முருங்க மரத்து மேல
அம்புட்டு பாசம்...
பர்ஸ்ட் மார்க் எடுத்தப்பவும்
பெரிய மனுஷி ஆனப்பவும்
முருங்க மரத்த கட்டிகினு நின்னது
இன்னும் லாந்தர் விளக்காட்டம் ஞாபகத்துல இருக்கு ...
கல்யாணம் குழந்தைனு
வேர் பிடுங்கி நட்டாச்சு என்னை ..
நட்டுவச்சா தழைக்கிற முருங்கையாட்டம்
வளர ஆரம்பிச்சாச்சு..
வீட்டுக்கு வரும் கடுதாசி நின்னுபோனமாதிரி
புயல் அடிச்சு விழுந்துபோனதா அம்மா சொன்னா ..
பூனை இறந்ததுக்கே
ஒருவாரம் சாப்பிடல மாமனார் வீட்டுல...
வீட்டுக்காரருக்கு கொழம்பு வைக்கணும்
நான் கீரையை ஆய ஆரம்பிக்கிறேன்
மரத்தில் இருந்து தாவி ஓடுகிறது ஒரு அணில்
அதே போல இன்னொரு முருங்கை மரத்துல .....
- நாகா

11-08-2017 சனிக்கிழமை ஒற்றையடி பாதை : 9 தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...

RJ Naga
11-08-2017
சனிக்கிழமை
ஒற்றையடி பாதை : 9
தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...
மயிலிறகு வச்சிருந்த
கணக்கு நோட்டு புத்தகத்தை
ஒட்டடை அடிக்கையில
பரண்மேல கண்டெடுத்தேன் ..
ஆறாம் வகுப்பு
ஆ பிரிவு படித்தபோது
ஒரு மத்தியான மழைநேரம்
பச்சை குத்தி போகக்கண்டேன் ...
நேத்திக்கு முன்தினம்
நடந்ததா இருந்தாலும்
டூரிங் டாக்கீஸ்ல பார்த்த
படம் போல ஓடுது ...
ஒத்த மயிலிறகு
கெஞ்சிக்கேட்டும்
பிஞ்சு விரலால
பிச்சி தரல பயபுள்ள ....
திருட்டு தனமாத்தான்
பிச்சி எடுத்துக்கிட்டேன்
களவு செஞ்சதை நான்
மறைக்க கத்துக்கிட்டேன் ...
மாமா வீட்டில்
விசில் திருடினேன்
பெரியப்பா வீட்டுல
ஹீரோ பேனா திருடினேன் ..
திருட்டுத்தனமா
பறிச்சுவந்த பட்டுரோசா
எங்கவீட்டுல பூத்ததுன்னு
நம்புற மாதிரி பொய் சொன்னேன் ...
காது பிடிச்சு திருகல
தோப்புக்கரணம்
போடச்சொல்லி அதட்டல
எனக்குள்ள குற்றவாளியை
சுட்டிக்காட்ட ஆளில்ல..
மெல்ல சிரிச்சுக்குவேன்
மத்தவங்கள நெனச்சு
லேசான ரசிச்சுக்குவேன் ...
சின்ன பதுமையாட்டம்
சிறகை விரிச்சுக்குவேன் ..
இல்லாத ஒண்ண
யாராச்சும் வெச்சிருந்தா
என்ன போல யாரோ
களவாடி போகலாம் ....
நேசத்தை களவாடி
போனவங்களுக்கு தான் தெரியும்
இருந்தும் இல்லாமல்
இருக்கும் அவஸ்தை ...
- நாகா.

12-03-2017 ஞாயிறு ஒற்றையடி பாதையில்: 10 தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...


RJ Naga
12-03-2017
ஞாயிறு
ஒற்றையடி பாதையில்: 10
தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...
எருக்கஞ்செடி பூத்திருக்கும்
எங்க வீட்டு தோட்டத்துல
எப்போவாச்சும் வழி தவறி
வந்துபோகும் பட்டாம்பூச்சி ..
சாயம் போன பூச்சி ஆனேன் - ஆத்தாடி
பேச்சில்லாம ஊமையானேன் ...
ஒத்தயடி பாதையிலே
வேலியோர ஓணாம்பூவில்
தட்டானை புடிக்க போயி
முள்ளுக்குத்தி நின்னதுண்டு ...
சொல்லுக்காக காத்திருந்தேன் - சிறுக்கிமக
கள்ளத்தனம் தொலைச்சிருந்தேன்
பள்ளிக்கூட பெல்லு சத்தம்
சத்தமா கேட்டபொறவும்
சொமைதூக்கி தலைக்கு வெச்சு
நிழல் மிதிச்சு போனதுண்டு ..
கத்திரி வெயிலுக்கு அப்பப்ப தாகம் - அய்யோ
கத்தரி செடிக்கு காம்பெல்லாம் காயம் ...
நாய்க்கர் வீட்டு எருமக்கண்ணு
மணியக்காரர் பம்பு செட்டு
மிராசுக்காரர் தோப்பு வீடு
குருவி கூடாட்டம் கடந்துபோவேன் ஒத்தையிலே ...
மந்தையில் நின்னு சொல்ல - மவராசிக்கு
மனசுக்குள்ள தெம்பு இல்ல ....
காயவெச்ச புளியபோல
களத்து மேட்டில் காத்திருக்க
கருவாட்டு பானைக்குள்ள
மாட்டிக்கிட்ட பூனை போல ..
அக்கறையா பேசத்தானே -ஆத்தா
ஆகாசத்த பாக்குறேன் நான் ...
புடிக்காத சிநேகம் இப்ப
பிஞ்சுபோன செருப்பாச்சு ..
புளிக்காத பாலு இப்ப
தயிராக நேரமாச்சு ...
வெத்தலையில் மைபோட்டு அவனைத்தான் தேடுறேன்
வெட்கத்தை விட்டுபுட்டு ஒத்தையில வாடுறேன் ...
- நாகா

13-03-2017 திங்கள் ஒற்றையடி பாதை: 11 தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் இன்று வலம் வந்த கவிதை ...



RJ Naga
13-03-2017
திங்கள்
ஒற்றையடி பாதை: 11
தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் இன்று வலம் வந்த கவிதை ...
ஆறு பூரா தண்ணியோட
ஆகாச தாமர மெதந்து ஓட
தண்ணிபாம்பாட்டம்
நீந்தி கடப்போம் அப்பாவும் நானும் ...
குளிக்க தொவைக்க
எல்லாத்துக்கும் ஆறுதான்
மழை வந்தா போதும்
ரொம்பி வழியும் எங்க ஊரு வெள்ளாமை ...
ஊடுபயிராட்டம்
மொச்சக்கொட்டை வெதைச்சு
கால்காணி புஞ்சை வாங்கமுடிஞ்சது
எல்லாம் இந்த ஆத்தாலதான் ...
ஆத்த கடந்து போனதல்லாம்
ஒரு காலம்
பரிசல்ல போனாலே
அம்புட்டு நேரமாகும் ...
நெல்லிக்கா திங்காமலே
தித்திக்கும் எங்கூரு தண்ணி..
கெண்டை மீனை கொழம்பு வெச்சா
ஊரெல்லாம் வாசம் வரும் ...
பொண்டுபுள்ளைங்க
குளிச்சு வளர்ந்த இடம் ....
செத்த மீனாட்டம்
கத்திரி வெயிலில் நெளியுது ...
ஆத்து மணல் எல்லாம்
எங்க ஆயி அப்பன் கால்சுவடு
கரையோரம் ஒதுங்குது
நுரைநுரையா கண்ணீரு..
கொஞ்சமா ஆறு இப்பவும் ஓடுது
ஏதோ ஒரு கலர்ல சோகையா
கண்ணாமூச்சி ஆடுது ..
இப்போ ஊர்ல எல்லோரும்
வேலைக்கு போறாங்க
சாய கம்பனியில
கை நெறைய சம்பளமும் வாங்கறாங்க...
சாயம் போயிட்டு இருக்கற
வாழ்க்கையைப்பத்தி
யாருக்கும் கவலையில்லை ...
காணியெல்லாம் காஞ்சி போச்சு
விவசாயம் செத்துப்போச்சு
ஆத்துல மூழ்குன ஊரு
ஊருக்குள்ள இப்போ மூழ்குது ஆறு.....
- நாகா

neelam enbathu song