Tuesday, September 4, 2018

24-05-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 67 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
24-05-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 67
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எங்கள் வீட்டில் முதன் முதலாக
தொலைபேசி வந்தது ....
வெள்ளை நிறத்தில் கருப்பு பொத்தான்களுடன்
செல்லமாய் சிணுங்கும் ....
யாரோ அழைக்க ஒலிக்கும் மணிச்சத்தத்தில்
பூனைக்குட்டியாய் அசைய ஆரம்பிக்கும் வீடு...
எதிர் வீடு பக்கத்து வீடு இப்படி
எல்லோரும் புழங்கும் இடமாகிப்போனது
எங்கள் வராண்டா ...
யாமம் கடந்தும் அழைப்பு வருகையில்
அக்கம்பக்கத்து கதவுகளை
தட்டி எழுப்புவது என் வேலை ...
இனிப்புகளில் சிதறியும்
கண்ணீரில் நனைந்தும் பிசுபிசுக்கும்
பொழுதுகளாகிப்போகும் சிலநேரம் ...
அழைப்பு வராத நாட்களை
சபிக்க கூட ஆரம்பிப்பான் தம்பி ..
தொலைபேசியில் நிகழும் உரையாடல்களில்
காது பொத்திக்கொண்ட சன்னல்களும்
கண்கள் திறந்துகொண்ட சுவர்களுமாக
இரை விழுங்கிய மலைப்பாம்பாக
நெளிய ஆரம்பிக்கும் ...
மழைநேரத்து ஈசல்களாக
மெல்ல முளைக்க ஆரம்பித்தது
தொலைபேசிகளும் ரகசிய உரையாடல்களும் ...
வராண்டாவை கடந்து செல்போனுடன் செல்லும்
என்னை ஏக்கமாய் பார்த்திருக்கலாம்
தொலைபேசி இருந்த இடத்தில
பூத்திருக்கும் தொட்டி செடி ....
- நாகா

No comments:

neelam enbathu song