Tuesday, September 4, 2018

21-03-2017 செவ்வாய் ஒற்றையடி பாதை : 18 தமிழ் 89.4 பண்பலையில் வானவில் உங்களிடம் பகிர்ந்து கொண்ட கவிதை ...



RJ Naga
21-03-2017
செவ்வாய்
ஒற்றையடி பாதை : 18
தமிழ் 89.4 பண்பலையில் வானவில் உங்களிடம் பகிர்ந்து கொண்ட கவிதை ...
ஒட்டுமொத்த வானத்தையும்
கக்கத்துல சுருட்டி வெச்சுகிட்டு
படலை தாண்டி வெளிய போவார் அப்பா...
ஒரு மந்தகாசமான புன்னகை
அனுமதி கேக்காம உள்ள நுழையும் ...
சின்னதும் பெரிசுமான
எங்க வீட்டு வானத்துல
வெளக்கேத்துற அம்மாவாலதான்
அமாவாசை ஞாபகமே அடிக்கடி வரும் ...
அதிராம பேசும் அப்பாகிட்ட இருந்து
அடிக்கடி வரும் வார்த்தை இதுதான் -
" பொம்மனாட்டி இருக்கிற வீடு "
சாவி கொடுத்தா ஆடுற பொம்மையாட்டம் அம்மா
தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையாட்டம் அக்கா...
பரண்ல கெடக்கும் மரப்பாச்சியாட்டம் நான் ..
எல்லாரோட கயிறும் அப்பா கையில ..
அப்பாவுக்கு கயிறை ஆட்டவும் தெரியல
சரியா பிடிக்கவும் தெரியல...
அரளி செடி பூக்குற எங்க காம்பவுண்டு தாண்டி
அடிக்கடி வந்து போகுது ஒண்ணு ரெண்டு பட்டாம் பூச்சி ..
திருடன் போலீஸு ஆட்டம் போல
எப்போவாச்சும் கண்ணாமூச்சி நடக்கும் வீட்டுல ..
இருக்கும் வரைக்கும் தெரியாம போச்சு
போனதற்கு பொறவுதான் புரிஞ்சது
அக்காவுக்கும் மனசு இருந்ததுன்னு அப்பாவுக்கு லேட்டா ...
என்ன செய்ய அரளிச்செடியை
ஆடுமேயாம பார்த்தவரு
அரைச்சு சாப்பிடுவா அக்கான்னு
கனா கண்டாரா என்ன ...
இப்போயெல்லாம் வீட்டுக்குள்ளேயே
பட்டாம் பூச்சிகள் வந்துபோகுது
அப்பாவோட வானம் வீட்டுக்குள்ள முடங்கி போச்சு ..
முதல் முறையா ஜன்னல் மூடின அப்பா
கதவு தொறக்க ஆரம்பிச்சார்...
- நாகா

No comments:

neelam enbathu song