Tuesday, September 4, 2018

15-06-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 81 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
15-06-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 81
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எங்கள் வீடு பொம்மைகளால்
நிரம்பி வழிந்தது ...
பாட்டியின் முனைஉடைத்த மரப்பாச்சி பொம்மை
அம்மாவை போல் வாய்பேசாமல்
தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மை
எனது சாதுவான கரடி பொம்மை
-இப்படியாக ஒவ்வொரு பொம்மையும்
ஒவ்வொருவருக்கு சொந்தம் என்று
சொல்லி கொண்டோம் ...
ரயில் பொம்மையும் மகிழுந்து பொம்மையும்
தம்பி சொந்தம் கொண்டாடினான் ..
கரடி பொம்மையுடன்தான் என் படுக்கை
போர்வைக்குள் நெளியும்...
தொலைக்காட்சி பெட்டி மேல்
அலமாரி மேல் பரண்மேல் என
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பொம்மைகள்...
வீட்டுக்கு வரும் உறவுகள் தரும் பொம்மைகள்
சிலநேரம் எடுத்து செல்லும் பொம்மைகள் என
பொம்மைகள் வருவதும் போவதுமாக இருக்கும் ...
சாவி கொடுக்கும் பொம்மை வந்த பிறகு
எல்லா பொம்மையும் அந்நியப்பட்டது ...
ஒரு நாள் சாவிகொடுக்கும் பொம்மை
இயங்க மறுத்தபோது
தேடி எடுக்க வேண்டி இருந்தது
இன்னொரு பொம்மையை ...
பொம்மைகளை அடுக்கி வைப்பதும்
துடைத்து வைப்பதுமாக அம்மாவின் வேலை
பம்பரமாய் சுழலும் ...
பொம்மைகள் உலகில் பொம்மைகளாகி
கொண்டிருக்கிறோம் நாம் ...
- நாகா

No comments:

neelam enbathu song