Monday, September 3, 2018

26-07-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 107 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
26-07-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 107
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எங்கள் அனுமதில்லாமல்
கட்ட ஆரம்பித்தது கூடொன்றை
வீட்டிற்குள் அந்த குருவி ...
கொஞ்சம் வைக்கோல் கொஞ்சம் பஞ்சு
நிறைய கீச் கீச் ....
இத்தியாதிகளுடன் உருவாக்கி விட்டது அது ...
புதுமனை புகுவிழாவில் வந்தவர்களை
எங்களைவிட அதிகம் வரவேற்றது அதுதான் ..
ஒரு பொன்னந்தி பொழுதில் எங்கிருந்தோ
அழைத்துவந்தது இன்னொரு குருவியை ..
பிற்பாடு இணைந்தே இரைதேடியது
இணைந்தே சண்டைபோட்டது
இணைந்தே தூங்கிப்போனது ....
பால்கனி ஒட்டி இருந்த ஜன்னல் நுழைந்து
உள்ளே வரவும் கற்றுக்கொண்டது அது ..
சுவர்கடிகாரத்தின் அசையும் பெண்டுலத்தின் ஓசையில்
தலை அசைக்கவும் பழகிய தருணத்தில்
காணாமல் போனது அந்த குருவி ..
பால்கனி சுவரில் அமர்ந்து ஏக்கத்தை
வீசிக்கொண்டிருக்கும் அதன் இருப்பில்
இதயம் நொறுங்க ஆரம்பித்தது எங்களுக்கு ..
ஒரு அதிகாலை பொழுதில்
கூட்டை பிய்த்து ஏறிக்கொண்டிருந்த
குருவியின் சிறகில் குத்திக்கொண்டிருந்த
அந்த மெல்லிசான கம்பியின் நுனியில்
கசிய தொடங்கியது ரத்தம் ....
உத்தரவு இல்லாமல் கிளம்பிவிட்டது
தனித்து இருந்த அந்த குருவி ...
" ஒரு காலத்தில் எங்கள் வீட்டிலும் குருவி கூடுகட்டியது ...."
- சொல்லிக்கொள்கிறோம் இப்போதெல்லாம் ...
- நாகா

No comments:

neelam enbathu song