Tuesday, September 4, 2018

09-05-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 56 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
09-05-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 56
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
மின்சாரம் துண்டிக்கப்பட்ட
அந்த ராத்திரி
சூரியனை அடுக்கி வைத்திருந்த வீட்டுக்குள்
சுள்ளி பொறுக்கியது....
வராந்தாவில் நிலவு
உளவு பார்த்துக்கொண்டிருந்தது ....
கத்திரிவெயிலின் விளிம்பில்
ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்புகளாகி
கொண்டிருந்தோம் நாங்கள்...
அரிக்கேன் விளக்கை ஏற்றிவைத்த அம்மா
அதிகம் சலித்துக்கொண்டாள் ...
எங்கோ தூரத்தில் இருந்து
இளையராஜா இசைத்துக்கொண்டிருந்தார்
ஒரு கோடை பன்னீர் மழையில் நனைந்தது...
பனைமட்டை விசிறியில் விரவிய காற்றில்
பனியன் நனைந்த அப்பாவின் ஆசுவாசம்
உறக்கத்தின் விழியில் விளக்கேற்றியது ...
கால் நீட்டி வாய்திறந்து
தம்பியும் தங்கையும் சொப்பனத்தில்
நனைந்து கொண்டிருந்தனர்....
ஆழ்ந்த நித்திரை வீட்டை மூழ்கடித்தது
லாந்தர் மேல் படியும் கரி தொட்டு
உதட்டுக்கு மேலே மீசை வரையும்
என் பிள்ளை குறும்பில் அந்த இருள்
அபிநயம் பிடித்தது ...
வைகறை முகம் கழுவி என்னை விரட்டும்
எல்லோரிடமும் அகப்பட்டு சிலிர்த்தது நேசம்....
நேற்றும் வீட்டில் மின்சாரம் தடைப்பட்டது
விளக்கின் கரி தொட்டு தீட்டிக் கொள்கிறேன்
யாருமில்லாத வீட்டில் எனக்கு நானே
நாசிக்கு கீழே மீசை...
- நாகா

No comments:

neelam enbathu song