Tuesday, September 4, 2018

neelam enbathu song


01-03-2017 புதன் ஒற்றையடி பாதை : 1 தமிழ் 89.4 பண்பலையில் " வானவில் " இன்றைய கவிதை ...

Raman Nagappan shared a photo.
RJ Naga
01-03-2017
புதன்
ஒற்றையடி பாதை : 1
இனி ஒவ்வொரு நாளும் பிரிவும் பிரிவு நிமித்தமுமான கவிதைகளி இந்த பகுதியில் உங்களுக்காக பாதிவேற்ற போகிறேன் ..
தமிழ் 89.4 பண்பலையில் " வானவில் " ஒற்றையடி பாதைக்காக ....
இன்றைய கவிதை ...
கின்னார சத்தத்தில
கெடையெல்லாம் முழிச்சிருக்கு ....
தழை பறிச்ச தொரட்டியெல்லாம்
தொழுவத்தில் படுத்திருக்கு ...
ஒத்தமாட்டு வண்டியிலே ஒய்யாரமா போறவக
லாந்தர் விளக்கொளியில் வக்கணையா வாரவக
ஒத்த கொடம் தண்ணிஊத்தி
நந்தவனம் பூத்திருக்கும்
கொசுவத்தில் தலை சாய்ச்சு
குண்டுமல்லி வேர்த்திருக்கும் ...
அய்யனாரு வாரதுபோல் என்ன ஒரு கம்பீரம்
சீரகசம்பாவ சமைச்சதுபோல் சாரீரம் ..
குத்துக்காலிட்டு நான் திண்ணையில காத்திருந்தா
வீதியில உன் நெனப்பு நெழல்போல குடைபுடிக்கும்...
ஆலமர விழுதுக்கு ஜடை பின்னி பார்த்தவத்தான்
ஒத்தப்பனை மரமாட்டம் தவிக்கறேனே இப்போது...
ஆத்தாடி அடிமனசை வேரோடு பறிச்சுப்புட்டான்
ரங்க ராட்டினமா என் மனச சுத்த உட்டான் ....
காதுக்குள்ள திருகாணியா காதலை நான் பூட்டிக்கிட்டேன்
சிறுக்கி மக உசுருக்குள்ள காதல் கதை எழுதிகிட்டேன் ...
- நாகா

02-03-2017 வியாழன் ஒற்றையயடி பாதை : 2 இன்றைய வானவில் இந்த கவிதையுடன் தன் வண்ணத்தை நம் நினைவு வீதியில் பூசி சென்றது ..


RJ Naga
02-03-2017
வியாழன்
ஒற்றையயடி பாதை : 2
இன்றைய வானவில் இந்த கவிதையுடன் தன் வண்ணத்தை நம் நினைவு வீதியில் பூசி சென்றது ..
குறும்பாட்டு கறிசமைச்சு
குத்தவச்சு காத்திருக்க
மத்தியான டவுன் பஸ்ஸும்
உன் வரவை பார்த்திருக்க
ஓடையில நாரையெல்லாம்
உம்பேரை சொல்லும்போது
கண்ணுபட கூடாதுன்னு
கன்னத்துல போட்டுக்கிறேன் ...
மச்சான் நீ போன இடம் மரிக்கொழுந்துக்கு தெரியல்ல
மருதாணி ஏன் செவக்கலைனு சத்தியமா புரியல...
பொள்ளாச்சி சந்தையிலே
பொழுதெல்லாம் உன்கூடதான்
கண்டாங்கி சீலைக்கும்
கனவெல்லாம் உன் மேலத்தான் ...
கைபுடிச்சு நடக்கையிலே
கைரேகை மாறிப்போச்சு
உன் தடம் பார்த்து கூடவந்து
வந்த வழி மறந்து போச்சு ....
உச்சியிலே வச்ச பூவு வாசம் விட்டு போகுதையா
நெத்தியில் உன் நெனப்பு விண்ணுவின்னு தைக்குதய்யா...
பாதகத்தி செஞ்சதென்ன
சொல்லி நீயும் போயிருந்தா
மிச்சம்மீதி உசுருக்கும்
பங்கம் வந்து சேராது ..
உனக்காக சுவாசிச்சேன்
அது உனக்கு தெரியல
நமக்காக யோசிச்சேன்
நெலமை இப்போ சரியில்ல ...
ஒத்தமாட்டு வண்டியாட்டம் தடுமாற விட்டுபுட்ட
செக்கு மாட்டு வாழ்க்கையைத்தான் தடம் மாற்றி காட்டிப்புட்ட.....
-நாகா

04-03-2017 சனிக்கிழமை ஒற்றையடி பாதை : 3 இன்றைய தமிழ் 89.4 பண்பலையில் நிகழ்ச்சியின் நிறைவில் இடம் பெற்ற கவிதை ...


RJ Naga
04-03-2017
சனிக்கிழமை
ஒற்றையடி பாதை : 3
இன்றைய தமிழ் 89.4 பண்பலையில் நிகழ்ச்சியின் நிறைவில் இடம் பெற்ற கவிதை ...
மஞ்சக்கனகாம்பரம்
கொள்ளையில பூத்திருக்கு
துலுக்க சாமந்தி
வாசத்தில வீடிருக்கு...
கூரையில அவரக்கொடி
ஆகாசம் பார்த்திருக்கு ....
கோபுரத்து நிழலாட்டம்
நெனப்புன்ன சுமந்திருக்கு ...
செறுவாட்டு துட்டுக்கு
காணிவாங்க முடியாது ..
அருகம்புல் திங்காட்டி
ஆட்டுபசி அடங்காது ..
மந்தையில் நின்னாலும்
தறிகெட்டு திரியாது ...
பருத்தி காட்டுக்குள்
வெடிச்சத்தம் குறையாது ...
கட்டைவண்டி போன தடம்
காஞ்ச ஆறு காட்டிப்புடும் ..
உள்ளுக்குள்ள கல்லெறிஞ்சா
பார்வையில் சாரல்வரும் ....
குறைகுடமா தளும்பறது
கைவளைகள் சொல்லிப்புடும் ..
குத்தவச்ச திண்ணையிலே
உன் நெனப்பு கோலமிடும் ..
மழை ஓய்ந்த நேரத்துல
கிளைகளிலே தூறல் வரும் ..
காகித கப்பலுக்கும்
கடல் மேல காதல்வரும் ..
பூனைக்குட்டி போலத்தானே
உன் காலசுத்தி கெடக்குறேன் ..
பொசுக்குன்னு பூத்ததால
காதலை பொத்திவச்சு தவிக்கிறேன் ...
- நாகா

05-03-2017 ஞாயிறு ஒற்றையடி பாதை : 4 தமிழ் 89.4 பண்பலையில் இன்று சுழன்ற இன்றைய வானவில் கவிதை ....


RJ Naga
05-03-2017
ஞாயிறு
ஒற்றையடி பாதை : 4
தமிழ் 89.4 பண்பலையில் இன்று சுழன்ற இன்றைய வானவில் கவிதை ....
ஊதாக்கலர் ரிப்பனுக்கு
பூப்போட்ட அரக்கு கலர் பாவாடை ..
ரெட்டைஜடை பின்னலுக்கு
ஒய்யாரமா மஞ்சக்கலர் தாவணி...
கடைசி பெஞ்சுல
செவனோ கிளாக் பிளேடால
கீரிவச்ச எம் பேரு ......
தட்டாமாலை சுத்தமா
அவ நெனப்பு தூங்காது ...
கொசுறு ஒண்ணு வாங்காம
சிறுக்கி கண்ணு மூடாது...
ஜாமென்ட்ரி பாக்ஸுக்குள்ள
வெச்சிருப்பா அர நெல்லிக்கா ..
பாதி கடிச்சு தண்ணி குடிக்க
தித்திக்கும் அவ நெனப்பு ..
கொடுக்கப்புளி சிநேகத்தில
எச்சில் பட்டா தப்பு இல்ல...
ஜென்மத்தை டம்பளர்ல
ஊத்தி நானும் குடிக்கப்போறேன் ..
ஆலமர பொந்துக்குள்ள
கிளியாட்டம் தங்கப்போறேன் ...
உள் நீச்சல் அடிக்கையிலே
கைய பிடிச்சுப்பா ..
சைக்கிள் மிதிக்கையிலே
வரப்போரம் பார்த்துப்பா...
ஆம்பளையா பொறந்திருந்தா
கண்ணாலம் கட்டிப்பேனு
கண்ணடிச்சு கைபுடிப்பா ...
இறுமாப்பு இல்லாம
சகஜமா தான் பேசிக்கோவோம் ...
கம்மங்கூழு கருவாட்டுகொழம்பா
பக்குவமா பழகிக்கோவோம் ...
மொட்டைமாடி வத்தலாட்டம்
காயறது என் பொழப்பு
காம்பவுண்டு செடி போல
தலைநீட்டுறது அவ பொழப்பு ...
எங்க போனாளோ இன்னும் தெரியல
பச்சை தாவணியும் இன்னும் சாயம் போகல...
தாகம் ஒண்ணு தொண்டைக்குள்ள
கட்டுப்பட்டு நிக்குது
தாயம் ஒண்ணு விழுந்துபுட்டா
பாம்பு ஒண்ணு கொத்துது ....
- நாகா

06-03-2017 திங்கள் ஒற்றையடி பாதை : 5 தமிழ் 89.4 பண்பலை வானவில்- லில் இன்று ஒலித்த கவிதையின் வரிவடிவம் ...


RJ Naga
06-03-2017
திங்கள்
ஒற்றையடி பாதை : 5
தமிழ் 89.4 பண்பலை வானவில்- லில் இன்று ஒலித்த கவிதையின் வரிவடிவம் ...
ஆத்துல வெள்ளம் வந்தா
அடிமனசு சில்லிடும்
ஆத்தா உன் நெனப்புல தான்
சாமியையே கும்பிடும் ...
நிழலாக நீயிருந்த
ராத்திரியில் தொலைச்சதென்ன
நிலவாக நீயிருந்த
நிழல் விழாம போனதென்ன ...
புளியங்கா புளிக்கறது
அது ஒண்ணும் குத்தம் இல்ல
வேப்பங்கா இனிக்கறத
கேட்க ஒரு நாதியில்ல...
பத்தாயம் நிரம்பாம
பாதகத்தி உன்னைத்தேடும்
பஞ்சார கோழிகூட
பட்டினியா கண்ண மூடும் ...
கட்ட வண்டி கடந்து போன
நதியில் இப்போ தண்ணி இல்ல
அடிமாட்டுக்கு போனதால
மூக்கணாங்கயிருக்கு வேலையில்லை ..
சிறுக்கி மக உன் நெனப்பு
செதறு தேங்கா ஆகிடுச்சு
சூடம் போல காத்துலதான்
கரைஞ்சுதானே போயிடுச்சு ..
நேத்திருந்த மீனெல்லாம்
கருவாடா ஆனதென்ன
காத்திருந்த கொக்கெல்லாம்
ஏமாந்து போனதென்ன ..
ஒரு வாட்டி வந்துவிடு
விட்டதெல்லாம் செஞ்சிடுறேன்
பட்ட கடனுக்கு நான்
என் உசுர தந்திடுறேன் ...
நீ போன பாதையெல்லாம்
நெருஞ்சியா பூத்திருக்கு
தொட்டி செடியெல்லாம்
உன் திசையை பார்த்திருக்கு ...
வாசல் கோலத்துல
புள்ளியாக நீ இருப்ப ...
பூசணி பூவாட்டம்
நாள் கணக்கா நீ சிரிப்ப...
ஆத்தா உன் சீலையை நான்
கொஞ்ச நேரம் போர்த்திக்கறேன்
கருவாகி உனக்குள்ள
கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்….
- நாகா.

07-03-2017 செவ்வாய் ஒற்றையடி பாதை : 6 தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் ஒலித்த நிறைவு கவிதை ...


RJ Naga
07-03-2017
செவ்வாய்
ஒற்றையடி பாதை : 6
தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் ஒலித்த நிறைவு கவிதை ...
ஆலமரத்த சுத்தி
அடிவயத்தை பார்த்ததில்ல...
அரசமர கிளையிலே
தொட்டில் கட்டி அசைத்ததில்ல ...
சோளகதிராட்டம்
தலைசாய்த்து நானிருந்தேன்
சொக்க தங்கத்தின்
வரவுக்கு காத்திருந்தேன் ...
ஆனி பொன்போல
அசைந்து வரும் சித்திரமோ
தெப்பக்குளத்துக்குள்ள
மிதந்துவரும் வெண்ணிலவோ ...
மரப்பாச்சி பொம்மைக்கு
மயிலிறகில் சட்டை தச்சேன்
சடைபின்னி பூ முடிச்சு
கன்னத்துல பொட்டு வெச்சேன் ...
அடிவயத்தை தொட்டுப்பார்த்து
அடிக்கடி நான் சிரிச்சுக்குவேன்..
மாம்பிஞ்சு கால் உதைக்க
பொசுக்குன்னு முழிச்சுக்குவேன் ...
பல்லாங்குழி சோழியாட்டம்
நாள் கணக்க நான் ரசிக்க
கன்னங்குழியோரம்
முத்தக்கப்பல் தான் நனைக்க
கரைதட்டி கிடக்குது
தாய்மர கப்பல் ஒண்ணு ..
கொடைசாய்ஞ்சு கிடக்குது
கோபுர தீபம் ஒண்ணு ...
ரத்தமும் சதையுமா
கைகால் அசைக்கும்னு
காத்திருந்த நேரத்துல
கரைஞ்சு போனதென்ன ...
கொலுசு போட்டுக்கிட்டு
தரையெல்லாம் தாளமிட
நடைவண்டி ஒட்டிக்கிட்டு
கூடமெல்லாம் சுத்திவர
உன் பிஞ்சு விரல்பிடிச்சு
என் சுட்டுவிரல் நான் தொலைக்க
மெல்ல ஒளிஞ்சுக்கிட்டு
என் முந்தாணையை நீ இழுக்க
எல்லாம் கனவாச்சு
உன் வரவு கானல் நீராச்சு
செல்ல விதை உன்ன
கை நழுவ விட்டாச்சு ..
- நாகா

neelam enbathu song